பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர் சாலையில் குப்பை கொட்ட சென்ற பெண்ணின் தாலி சங்கிலியை மர்ம கும்பல் ஒன்று பறித்து சென்றுள்ளது. முல்லை நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் சுந்தர பாண்டியனின் மனைவி கவிதா நேற்று காலை 8 மணியளவில், தனது வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் உள்ள குப்பை தொட்டியில் போட வெளியே வந்துள்ளார். அதே நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் கவிதா குப்பை கொட்ட குனிந்தபோது, திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துள்ளனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த சூழலில் சுதாரித்துக் கொண்ட கவிதா மற்றொரு கையால் தாலிக்கொடியை இறுக பிடித்துள்ளார். அதனால் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தாலிக் கொடியிலிருந்து, தாலி காசு, பொட்டு என 2 பவுன் தங்கம் மட்டும் கொள்ளையன் கையோடு சென்றதுள்ளது. கத்திகொண்டே வீட்டிற்குள் நுழைந்த கவிதா, தன் கணவரிடம் நடந்தவற்றை கூறி இருவரும் பெரம்பலூர் போலீசில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் எளம்பலூர் சாலையில் உள்ள முல்லைநகர் பகுதி வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி-கேமரா பதிவுகளை கொண்டு பைக்கில் வந்த கொள்ளையர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு முன்பே நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரம்பலூர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.